இது தான் அண்ணாமலை தைரியம்.. துரை வைகோ விமர்சனம் !!
இது தான் அண்ணாமலை தைரியம்.. துரை வைகோ விமர்சனம் !!

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்ந்து மக்களை பெரும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது. இப்பொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசியப்பொருட்களின் விலையும் உயர்ந்து மக்கள் பொருளாதார சுமையை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், மண் அடுப்புகளை தலையில் சுமந்து நூதன முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில், தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துரை வைகோ, மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. இது சாதாரண நடுத்தர மக்களை மிகவும் பாதித்துள்ளது. மக்கள் விரோத போக்கில் தொடர்ந்து ஈடுபட்டால், ஆட்சியில் தொடர்ந்து இருக்க முடியாது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
சொத்து வரியை தமிழக அரசு உயர்த்தி உள்ளதால் மக்கள் பலர் பாதிக்கப்படுவார்கள். இதனால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உரிய ஆதாரம் இல்லாமல் தமிழக முதல்வரின் பயணங்களை விமர்சித்து வருகிறார். இது ஆரோக்கியமான விமர்சனம் இல்லை. அவர் பாஜக தலைவராக பதவியேற்றதிலிருந்து கட்சியை வளர்ப்பதற்காக ஏராளமான விமர்சனங்களை கூறி வருகிறார். என்னைக் கைது செய்யுங்கள் என தெரிவித்து விட்டு ஒய் பிரிவு பாதுகாப்பு கேட்டுள்ளார். இதுதான் அவர் தைரியம்.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு தற்போதைய நிதி இழப்பு சூழ்நிலையில் நிதி வழங்கி உதவி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு இலங்கையிடம் இந்திய மீனவர்களை பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச ஒப்பந்த விதிமுறைகளை மத்திய அரசு இலங்கையிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். மக்கள் விரோத போக்கை பா.ஜ.க அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், மக்கள் சினத்திற்கு ஆளாகி வந்தால், ராணுவமே வந்தாலும் ராஜபஜ்சே நிலைமை தான் மோடி அரசாங்கத்திற்கும் ஏற்படும் என்றும் துரை வைகோ தெரிவித்தார்.
newstm.in

