எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியம் இதுதான்.. சசிகலா உருக்கமான பேச்சு
எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியம் இதுதான்.. சசிகலா உருக்கமான பேச்சு

அதிமுக முன்னாள் பொதுச்செயலாளரும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், முதல்வராக பதவியேற்க இருந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பின் காரணமாக அவரது தோழியான சசிகலா சிறைக்கு சென்றார்.
அன்று முதல் அதிமுகவில் அடுத்தடுத்து ஏற்பட்ட திருப்பங்கள், சர்ச்சைகள் இன்றளவும் தொடர்கிறது. இடையில் சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் என்னும் பெயரில் தனிகட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கினார்.

இந்த நிலையில், தஞ்சாவூரில் சசிகலாவுடன், திவாகரன் தலைமையிலான அண்ணா திராவிடர் கழக இணைப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சசிகலா, எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவை சந்தித்தது. அன்றைக்கு அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும், அதிமுகவின் கதை முடிந்துவிட்டது எனவும் எத்தனையோ பேர் கூறினர். அந்தக் கனவோடுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இருந்தார். ஆனால், அவர்களுடைய கனவை மொத்தமாகக் கலைத்தோம்.
ஒரு பிரிந்த கட்சியை எப்படிச் சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாகக் கற்றுக் கொண்டேன். எனவே, அனைவரையும் ஒன்றுபடுத்தி, கட்சியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வதே என் எஞ்சியுள்ள வாழ்க்கையின் லட்சியமாகக் கருதுகிறேன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடைபெற்ற பொதுக் குழுக்கள்தான் உண்மையானவை. அந்த பொதுக் குழுக்கள்தான் கட்சியின் சட்ட விதிகளின்படி முறையாக அழைப்புக் கொடுத்து, ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக் குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கின்றனர்.
அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒரு முறை கட்சியின் சட்ட விதிகளை யாருமே மாற்றியதில்லை. இவர்கள் செய்கிற பணிகள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் நல்ல தீர்வு ஏற்படும், என சசிகலா கூறினார்.
newstm.in

