இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்! வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்க்கலாம்!
இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்! வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பார்க்கலாம்!

மதுரை சித்திரைத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை காண இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது . கொரோனா பரவல் காரணமாக சென்ற ஆண்டை போலவே நடப்பாண்டிலும் கோவில் உள்பிரகாரத்திலேயே திருவிழா பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த விழாவின் ஒருபகுதியாக நடத்தப்படுவது கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி.இந்த திருவிழா தினத்தில் பக்தர்கள் பலர் கள்ளழகரைப்போல் வேடமணிந்து தண்ணீர் பீய்ச்சவும், திரி எடுத்தும் வேண்டுதல் நிறைவேற்றுவர். ஐந்தாம் நாளான இன்று ஏப்ரல் 27ம் தேதி காலை 8 மணியளவில் ஆண்டாள் மாலை சாற்றுதல் நடைபெறும். இதனையடுத்து காலை 9 மணியளவில், கள்ளழகர் தங்கக்குதிரையில் ஆடி வீதியில் புறப்பாடு காண்கிறார்.
அந்த சமயத்தில் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதுபோல் வைகை ஆற்று படங்கள் பிளக்ஸ் பேனர்களாக வைக்கப்பட்டுள்ளன. தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் விட்டு அழகர் ஆற்றில் இறங்குவது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவை கோவில் நிர்வாகம் சார்பில் இணையதளம் மூலம் பக்தர்கள் வீட்டில் இருந்த படியே கண்டு களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நேரடியாக அழகர் ஆற்றில் இறங்குவதை இந்த வருடமாவது பார்க்கலாம் என்ற லட்சோபலட்சம் பக்தர்களின் கனவு கவலையாகவும் ஏமாற்றமாகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.