குடும்பத் தகராறில் சோகம்.. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. 3 வயது சிறுமி பலி..!
குடும்பத் தகராறில் சோகம்.. 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த தாய்.. 3 வயது சிறுமி பலி..!

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி ஆசாரிப்பட்டறை தெருவைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் மகன் ஆனந்தன் (34). சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (26).
இவர்களுக்கு மோனிஷா (5), மோதிகா (3) என்ற இரண்டு குழந்தைகள். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஆனந்தன் குடும்பத்தினர் பெருமாகவுண்டம்பட்டி வி.பி.எஸ் தெருவில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகின்றனர்.
கணவன் - மனைவி இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த தனலட்சுமி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார் .
நேற்று புதன்கிழமை மதியம் குழந்தைகள் 2 பேருடன் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி, அங்குள்ள விவசாய தோட்டத்திற்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்குள்ள கிணற்றில் தனது 2 குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக தூக்கி வீசியுள்ளார். பின்னர் தானும் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்த போது, உள்ளே 3 பேரும் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
உடனே சிலர் கிணற்றுக்குள் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் தனலட்சுமி மற்றும் மோனிஷா ஆகியோரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. முதலில் வீசப்பட்ட இளைய மகள் மோதிகா நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் மகுடஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும், சங்ககிரி தீயணைப்பு மீட்பு நிலைய அலுவலர் அருள்மணி தலைமையிலான வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி குழந்தை மோதிகா உடலை மீட்டனர். உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

