பெரும் சோகம்.. வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் பலி..!
பெரும் சோகம்.. வேன் - லாரி நேருக்கு நேர் மோதல்.. 9 பேர் பலி..!

தெலுங்கானா மாநிலம் கமரெட்டி மண்டலம் பகுதியைச் சேர்ந்த 28 பேர், எல்லா ரெட்டி, பிட்லம் பகுதியில் நடந்த சந்தையில் பொருட்கள் வாங்க மினி வேனில் சென்றனர். மினி வேனை, சாயி என்பவர் ஓட்டிச் சென்றார். சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, பிட்லம் பகுதியிலிருந்து நிஜாம் சாகருக்கு நவதானியங்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வேகமாக வந்துகொண்டு இருந்தது.
அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியும், மினி வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், மினி வேனின் முன்பகுதி நொறுங்கியது. மினி வேனில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அலறி துடித்தனர்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு எல்லா ரெட்டி பான்ஸ் வாடா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மினி லாரி டிரைவர் சாய், லட்சவம்மா, தேவய்யா ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கம்சவம்மா, கேசவய்யா உள்ளிட்ட 6 பேர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. மேலும், 21 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து எல்லா ரெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

