அதை நம்பாதீங்க.. அஜித் தரப்பில் விளக்கம்..!
அதை நம்பாதீங்க.. அஜித் தரப்பில் விளக்கம்..!

பெரும்பாலான திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களின் மூலம் அறிவிப்புகளையும், அவர்களுடைய ரசிகர்களுடன் உரையாடல்களையும் நிகழ்த்துவர்.
சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிவதால், பல நடிகர் - நடிகைகள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகையும், நடிகர் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில், ‘ஷாலினி புதிதாக தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கு’ என்று பதியப்பட்டிருந்தது.
இந்த பதிவைப் பார்த்த அவருடைய ரசிகர்களும், நடிகர் - நடிகைகளும் அந்த கணக்கை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்றும், அதனை யாரும் பின்தொடர வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜித் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ஷாலினி அஜித்குமார் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, ட்விட்டரில் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் அஜித்குமார் முன்னரே சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர் மட்டுமின்றி, அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

