நீதிபதி ஆகிவிட்டார் உபி முதல்வர்.. அசாதுதீன் ஓவைசி விமர்சனம்..!
நீதிபதி ஆகிவிட்டார் உபி முதல்வர்.. அசாதுதீன் ஓவைசி விமர்சனம்..!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாஜகவின் நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, அவர்களை கட்சி பொறுப்பிலிருந்து பாஜக மேலிடம் நீக்கியது.
ஆனாலும், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.
இதில், திடீரென வன்முறையும் ஏற்பட்டது. இந்த வன்முறையில் போலீசார் உட்பட பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக, உத்தரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், உபியின் பிரயாக்ராஜ் நகரில் ஏற்பட்ட வன்முறைக்கு, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஜாவேத் முகமது என்பவர் மூளையாக செயல்பட்டதாக போலீசார் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், ஜாவேத் முகமது வீடு புல்டோசர் மூலம் இடித்து தள்ளப்பட்டது. அவர் வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெறவில்லை என்றும், அதன் காரணமாகவே அந்த வீட்டை இடித்ததாகவும் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணைய அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு குறித்து எ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி கூறுகையில், “உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாகி விட்டார்.
அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி என அறிவிக்க முடியும். அவர்களின் வீடுகளையும் இடித்துத் தள்ள உத்தரவிட முடியும்” என்று விமர்சித்துள்ளார்.

