நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டெபாசிட் தொகை இரட்டிப்பு!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் டெபாசிட் தொகை இரட்டிப்பு!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வருகிற 27ஆம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19ஆம் தேதி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

