நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல- அரசு விரிவான அறிக்கை !!
நடிகர் விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்ல- அரசு விரிவான அறிக்கை !!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்ட திடீரென உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
இதனிடையே, நடிகர் விவேக் ஏப்ரல் 15ஆம் தேதி கொரோனா தப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், 17ஆம் தேதி உயிரிழந்தார். இதனால் அவர் உயிரிழப்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் தான் அவர் உயிரிழந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. எனினும் இதற்கு அப்போதே சுகாதாரத்துறை மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வந்தது.
இந்த விசாரணை முடிவில் விவேக் மரணத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்துள்ளது. தடுப்பூசிக்குப் பிறகான பாதக நிகழ்வுகளை ஆராயும் மத்திய அரசின் தேசிய குழுவில் (AEFI) இடம்பெற்றிருந்த மருத்துவ நிபுணர்கள், விவேக் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தபோது பெறப்பட்ட அறிக்கைகளையும் ஆய்வுசெய்து இறுதி முடிவைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
மத்திய சுகாதாரத்துறையின் தடுப்பூசி பிரிவின் ஓர் அங்கமாகச் செயல்படும் இந்தக் குழு, விவேக்கின் மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் தொடர்பில்லை; இது தற்செயல் நிகழ்வு என்று தெரிவித்துள்ளது.விவேக்குக்கு இதய ரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது. அடைப்பின் காரணமாக இதயத்தால் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போவதால் ஷாக் (Cardiogenic shock) ஏற்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அசாதாரண இதயத் துடிப்பும் காணப்பட்டது. இந்தக் காரணங்களால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.
newstm.in

