தன் உயிரை தியாகம் செய்த உருவான நாள் தான் ‛வேலன்டைன்ஸ் டே’ !!
தன் உயிரை தியாகம் செய்த உருவான நாள் தான் ‛வேலன்டைன்ஸ் டே’ !!

உலகெங்கும் உள்ள காதலர்கள், ‛வேலன்டைன்ஸ் டே’ எனப்படும் காதலர் தினத்தை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். காதலை வெளிப்படுத்தவும், வெளிப்படுத்திய காதலை கொண்டாடவும் இந்நாள், திருவிழாவை விஞ்சும் அளவு கொண்டாடப்படுகிறது.
ஆனால், இந்த நாள், ஒரு துக்க தினம் என்பது உங்களில் பலருக்கு தெரியுமா? ஆம்... திருமணத்தை ஆதரித்த, ஆண், பெண் இடையே இருக்கும், இயற்கையான காதலை ஆதரித்த, பாதிரியார் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நாளைத் தான், நாம், காதலர் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இத்தாலி நாட்டின் ரோம் நகரில், கி.பி. மூன்றாம் நுாற்றாண்டில், வாழ்ந்த, கிறிஸ்த்துவ பாதிரியார் பெயர் தான் வேலன்டைன். அப்போது, அண்டை நாட்டு படைகளிடமிருந்து தங்கள் நாட்டு படையை வலிமைபடுத்தும் முயற்சியில், இத்தாலி அரசு தீவிரமாக களம் இறங்கியது. அதற்காக, அந்நாட்டு இளைஞர்களை வலிமையானவராக்க பல முயற்சி மேற்கொண்டது. ஆண்கள் திருமணம் செய்து, இல்லறத்தில் ஈடுபட்டால், அவர்கள், உடல் ரீதியான பலஹீனம் ஆக வாய்ப்புள்ளதாக, அரசுக்கு ஆலோசனை தரும் குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
தவிர, திருமணம் புரியும் ஆண்கள், குடும்ப சென்ட்டிமென்ட் காரணமாக, போரில் எதிரிப்படைக்கு எதிராக திறம்பட செயலாற்றுவதில் சிக்கல் ஏற்படலாம் எனவும், அந்த குழு, அரசிடம் கருத்து தெரிவித்தது. இதை ஏற்ற இத்தாலி அரசர், அந்நாட்டு இளைஞர்கள் திருமணம் புரிய தடை விதித்தார். அதையும் மீறி, திருமணம் செய்வோர் அல்லது காதலிப்போருக்கு, கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால், அந்நாட்டில் ஒரு வித பதற்றமான சூழல் நிலவியது.
அப்போது, ரோம் நகரில் ஆன்மிக சேவை ஆற்றி வந்த பாதிரியார் வேலன்டைன், இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திருமணம் செய்து வைத்தார். ஆண், பெண்ணுக்கு திருமண வாழ்க்கை அவசியம் என்பதை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தார்.

திருமண வாழ்வையும், இளையோரின் காதலையும் ஆதரித்த, வேலன்டைன்னை, அந்நாட்டு அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அரச துரோகம் செய்ததாகக் கூறி, வேலன்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதன் படி அவர், அடித்து காெல்லப்பட்டார்.
அவர் இறந்த தினம், பிப்., 14. அந்த நாளில், அவரது நினைவாக, காதலர்களும், அவர் உதவியால் திருமணம் செய்த தம்பதியரும், வேலன்டைனுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அந்நாளில், அவரது கல்லறையில் ரோஜா மலரை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதுவே, நாளடைவில், காதலர்களுக்கிடையே, ரோஜா பகிரும் வழக்கமாக மாறியதாகவும் கூறப்படுகிறது. காதலை உயிர்ப்புடன் வைக்கவும், திருமணத்தை ஆதரிக்கவும் செய்த வேலன்டைன் படுகொலை செய்யப்பட்ட வரலாறு தெரியாத இக்கால காதலர்கள், அந்நாளை, காதலர் தினம் என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்நாளில், வேலன்டைனை நினைவு கூறுகிறோமோ இல்லையோ, பப்களிலும், பார்களிலும், ஓட்டல்களிலும், சினிமா தியேட்டர்களிலும், பார்க், பீச் போன்ற பொது இடங்களிலும், அநாகரீகமான முறையில் நடந்து கொள்வதையாவது, காதல் ஜோடிகள் தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக, ஆன்மிகம் நாடி செல்லும் கோவில்களில் கூட, காதலர்களின் தொல்லை, மெய்யன்பர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இக்கால காதலர்கள், இது போன்ற செயல்களை தயவு செய்து, தவிர்க்க வேண்டும்.
newstm.in

