வாகனங்களுக்கு தீ வைப்பு.. கல்வீச்சு.. 144 தடை உத்தரவு அமல்..!
வாகனங்களுக்கு தீ வைப்பு.. கல்வீச்சு.. 144 தடை உத்தரவு அமல்..!

கர்நாடக மாநிலம், ஷிவமொகாவில் நேற்று இரவு 9 மணியளவில் பஜ்ரங் தள் ஆர்வலர் ஹர்ஷா (26) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஷிவமொகா நகரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், ஷிவமொகா நகரில் சில இடங்களில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இதனால், ஷிவமொகா நகரத்தில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.
இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா ஜனேன்ந்திரா கூறுகையில், “பஜ்ரங் தள் நிர்வாகி கொலைக்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்தவித தொடர்பும் இருப்பதாக தற்போது வரை நடைபெற்று வரும் விசாரணையில் தெரியவில்லை.
எனவே, இந்தக் கொலை சம்பவத்திற்கும் ஹிஜாப் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை. வேறு காரணங்களுக்காக இந்தக் கொலை நடந்துள்ளது. ஷிவமொகா மிகவும் பதற்றமான நகரமாகும்” என்றார்.

