கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு..!!
கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு..!!

ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசடத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதையடுத்து விவசாயிகள் குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் சாகுபடி மேற்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் இருந்தால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது என்பது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால், அணையின் நீர்மட்டம் 117 அடியாக உள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 120 அடியாகும்.
இதன் காரணமாக டெல்டா பாசனத்திற்காக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து 5,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், இன்று காலை கல்லணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று மாலை கல்லணை திறக்கப்படும் என நீர்ப்பாசனத் துறை அறிவித்துள்ளது. கல்லணையிலிருந்து திறக்கப்படும் நீரானது காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளின் வழியாக, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ,புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களில் குறுவை மற்றும் சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படும். இதன்மூலம் 4 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

