நாங்க காந்தியையே விட்டு வைக்கவில்லையே.. நீங்க யார்..? முதல்வரை மிரட்டிய இந்து மகாசபா நிர்வாகி கைது..!!
நாங்க காந்தியையே விட்டு வைக்கவில்லையே.. நீங்க யார்..? முதல்வரை மிரட்டிய இந்து மகாசபா நிர்வாகி கைது..!!

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ளது நஞ்சன்கூட்டில் என்ற பகுதியில் ஒரு இந்து கோவில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது. அதனை இடிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அம்மாநில பாஜக அரசு அந்த கோயிலை இடித்தது.
இதற்கு அங்கிருந்த சில இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அப்படித்தான் இந்து மகா சபையும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் நிர்வாகிகள் சிலர் பாஜகவுக்கு எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அகில பாரத் இந்துமகா சபையின் மாநிலப் பொதுச் செயலாளர் தர்மேந்திரா என்பவர் பேசியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், “இந்துக்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிரான யாரையும் விடமாட்டோம், நாங்கள் காந்தியையே விட்டு வைக்கவில்லை, நீங்க யார்? அதெப்படி எங்கள் கோயிலை நீங்கள் இடிக்கலாம்? கோயில் இடிப்பை நாங்கள் ஏற்க மாட்டோம்.. அதை அனுமதிக்கவும் முடியாது.. நீதிமன்றத்தின் உத்தரவு இந்துக்கள் மீதான தாக்குதல்” என்று என்று முதல்வர் பொம்மைக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.
இந்த பேச்சுதான் கடுமையான சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. சமூகவலைதளங்களில் வீடியோ வெளியானதால், இதன்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்தான், மிரட்டல் விடுத்த தர்மேந்திரா உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அமைப்பின் தலைவர் லோஹித் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர்கள் கைதாகி உள்ளனர். தங்கள் அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாகவும், முதல்வருக்கு மிரட்டல் விடுத்ததாகவும் தன்னுடைய புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

