எங்களுக்கு லிமிட்டே கிடையாது! ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக குடிமகன்கள்!
எங்களுக்கு லிமிட்டே கிடையாது! ஆந்திராவுக்கு படையெடுக்கும் தமிழக குடிமகன்கள்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு முடக்கம் அமலில் உள்ள நிலையில் குடிமகன்கள் ஆந்திராவுக்கு சென்று மதுவாங்கி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளதால் குடிமகன்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வாங்கிவைத்த ஸ்டாக் எல்லாம் முடிந்துவிட்டதால் அடுத்து எப்போது டாஸ்மாக் திறக்கும் என்ற காத்திருப்பில் உள்ளனர்.

ஆனால் ஆந்திராவில் பொதுமுடக்கம் இருந்தாலும் அங்கு மதுக்கடைகள் மூடப்படவில்லை. இதனால் எல்லையோர மாவட்டங்களில் வசிக்கும் மது குடிப்போர் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சென்று மது வாங்குகின்றனர்.

ஆந்திராவை ஒட்டியுள்ள திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கும்மிடிபூண்டி, சுண்ணாம்புகுளம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடிகாரர்கள் பைக்கில் மூலமாகவோ அல்லது நடந்து சென்றோ ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளில் மது வாங்குவதாக கூறப்படுகிறது. இதனால் எல்லையில் சோதனையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
newstm.in

