நாம் பைத்தியம் ஆகி விடுவோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!
நாம் பைத்தியம் ஆகி விடுவோம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு..!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் உடல் உறுப்பு தான பயிற்சி பட்டறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: “மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என கருணாநிதி தீர்மானம் போட்டார். புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களையும் சேர்த்து புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.
தமிழகத்தில் 36 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இன்னும் ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் தொடங்க உள்ளன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் என்ற நிலை வரும்.
கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்டவற்றில் பணியாற்ற முன்னுரிமை கொடுக்கப்படும்.

டெல்லியில் நடைபெற்ற அறிவாலயம் திறப்பு விழாவிற்கு ராகுல் காந்தி ஏன் வரவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்கிறார். இதுபோன்ற அறிவாளித் தனமான கேள்விகளை அவரால் மட்டுமே கேட்க முடியும்.
அறிவாலயத்தை திறந்து வைத்தவர் சோனியா காந்தி என்பதை ஜெயக்குமாருக்கு ஞாபகப்படுத்த வேண்டியதிருக்கிறது. தொடர்ச்சியாகவே அவர் இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு வருகிறார். ஜெயக்குமார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நாம் பைத்தியம் ஆகி விடுவோம்” என்றார்.

