அடிப்படை வசதி என்னாச்சு..?: மேயர் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!
அடிப்படை வசதி என்னாச்சு..?: மேயர் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு..!

மதுரை மாநகராட்சி 97 வது வார்டு திருப்பரங்குன்றம் துர்கா காலனியில் தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நலவாழ்வு மையம் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று (26-ம் தேதி) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், ஏற்கனவே இப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை பல ஆண்டுகளாக பூட்டி கிடப்பதாகவும், அதை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
மேலும், எங்கள் பகுதியில் குடிநீர், சாலை வசதிகள் இல்லை. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மேயர் இந்திராணி வாகனத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்களிடம் சமாதானம் பேசி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

