விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? பிரதமர் மோடிக்கு பகிரங்க கேள்வி !
விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? பிரதமர் மோடிக்கு பகிரங்க கேள்வி !

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டனர். பாஜகவினர் போராட்டக்காரர்கள் மீது வேகமாக காரை ஏற்றியது தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது. இதில் மத்திய இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகனுக்கும் தொடர்பு உள்ளது அம்பலமாகி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக இருப்பதாகத் தெரிவித்த கேஜரிவால் ஒட்டுமொத்த அமைப்பும் குற்றவாளிகளைக் காப்பதில் குறியாக இருப்பதாகவும், இதனுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஓராண்டாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற லக்கிம்பூர் செல்லும் எதிர்க்கட்சியினரை உத்தரப்பிரதேச அரசு தடுப்பு நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
newstm.in

