ரேஷன் கடைகளில் ஏன் இப்படியொரு திட்டம்.. சொன்னதை செய்யுமா திமுக அரசு?
ரேஷன் கடைகளில் ஏன் இப்படியொரு திட்டம்.. சொன்னதை செய்யுமா திமுக அரசு?

தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சில நேரங்களில் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை குறைவாக விநியோகம் செய்யும் போது ரேஷன் ஊழியர்களுக்கு சிக்கல் எழுகிறது. அதாவது பொதுமக்களுக்கு போதிய அளவில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்ய முடிவதில்லை. இதற்கு உணவு துறை மீது கூட்டுறவு துறை குற்றம்சாட்டுகிறது. கூட்டுறவு துறை மீது உணவு துறை குற்றம் சுமத்துகிறது. இப்பாடி மாறி மாறி குற்றம்சாட்டுவதோடு, சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பேசிய அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத் தலைவர் ராஜேந்திரன், தமிழகத்தில் கூட்டுறவு துறை மூலம் 33 ஆயிரம் ரேஷன் கடைகளும், உணவு துறை மூலம் 2 ஆயிரம் ரேஷன் கடைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. உணவு மானியத்திற்கு ஆண்டுதோறும் 7,500 கோடி ரூபாயை தமிழக அரசு செலவிடுகிறது. இந்நிலையில் ஒரே வேலையை செய்யும் கூட்டுறவு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளமும், வாணிப கழக ஊழியர்களுக்கு அதிக சம்பளமும் வழங்கப்படுகிறது.

ஆனால் இரு துறைகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் பல்துறை அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை மிரட்டி பணம் வசூலிக்கின்றனர். இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க ரேஷன் கடைகள் அனைத்தையும் ஒரே துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
அப்படி செய்தால் சம்பளம், கட்டட வாடகை, நிர்வாக செலவு போன்றவற்றால் அரசுக்கு ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகள் அனைத்தும் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக கூட்டுறவு மற்றும் உணவு துறை அமைச்சர்களிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே ஒரே துறையின் கீழ் ரேஷன் கடைகளை கொண்டு வருவதை தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன்மூலம் அரசுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ரேஷன் கடை ஊழியர்களும் பயனடைவர் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
newstm.in

