ஒமைக்ரான் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா? - தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சியாளர் விளக்கம் !
ஒமைக்ரான் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துமா? - தென் ஆப்பிரிக்கா மருத்துவ ஆராய்ச்சியாளர் விளக்கம் !

மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிவந்த உலக நாடுகளை மீண்டும் அச்சமடையச் செய்துள்ளது ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு. தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பும் பல்வேறு எச்சரிக்கைகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளது. இருப்பினும் ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியை உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் விஞ்ஞானிகள் இரவு, பகலாக ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்பட சுமார் 27 நாடுகளுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவிவிட்டது.
இந்தநிலையில், தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறியதாவது, தற்போதைக்கு, தடுப்பூசிகள் இந்த காலகட்டத்தில் உங்களை நோயிலிருந்து பாதுகாக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் இளம் வயது மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் யாராக இருந்தாலும், தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளது.
இது ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளோம். இனி வரும் காலங்களில் இதன் வீரீயம் பற்றி தெரிய வரும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனாவின் அறிகுறிகள் என்பது பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும். அது உடல்வலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். மேலும், ஒமைக்ரான் பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
newstm.in