நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? : பிரதமர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு!!
நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? : பிரதமர் வெளியிட உள்ள முக்கிய அறிவிப்பு!!

நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
மேலும், விருதுநகரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்த பின்னர் பிரதமர் மோடி முதன்முறையாக தமிழ்நாடு வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடியும் முதல்வர் ஸ்டாலினும் முதன்முறையாக ஒரே மேடையை பகிர்ந்துகொள்கின்றனர்.

11 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டால் சுமார் 1,450 இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என கூறப்படுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது. நீட் கொடுமையால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த ஸ்டாலின் மோடி பங்கேற்கும் நிகழ்வில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகளே உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக அணி திரண்டுவிடக்கூடாது என்பதிலும் பாஜக கவனமாக உள்ளது. அதன் ஒருகட்டமாக நீட் தேர்விலும் பாஜக அரசு சில தளர்வுகளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்யாவிட்டாலும் தமிழகத்துக்கு விலக்கு என்ற அளவில் அல்லது மாநில அரசு முடிவு செய்துகொள்ளலாம் என்ற அளவில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
newstm.in

