கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்..
கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிக்கச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல்..

சென்னை அமைந்தகரை ராமையா தெருவை சேர்ந்தவர் மும்தாஜ் பேகம். இவர் தனது வீட்டின் பூட்டை உடைத்து தனது மருமகன் சிக்கந்தர் தாஜுதீன் (36) என்பவர் கொள்ளையடித்ததாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெண் ஆய்வாளர் நசீமா விசாரணை நடத்தினார். பின்னர் சம்பவம் நடந்த மும்தாஜ் பேகம் வீட்டிற்கு அவர் நேரில் சென்றார்.
அங்கு மும்தாஜ் பேகம் மற்றும் கொள்ளை அடித்ததாக கூறப்படும் சிக்கந்தர் ஆகியோரிடம் விசாரித்தபோது, அங்கு நின்ற சிக்கந்தரின் உறவினர் காதர்ஷெரிப் (48) என்பவரை ஆய்வாளர் நசீமா வெளியில் செல்லும்படி கூறினார். இதனால் காதர்ஷெரிப், பெண் ஆய்வாளர் நசீமாவுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு வாக்குவாதம் முற்றிய நிலையில் காதர்ஷரிப் ஆத்திரமடைந்து, காவல் ஆய்வாளர் நசிமாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்து, பணியில் இருந்த உதவி ஆய்வாளர் சிவசங்கர் ஓடிவந்து தடுத்துள்ளார். அவரையும் காதர்ஷரிப் சரமாரியாக தாக்கி சட்டையை கிழித்துள்ளார். உடனே அருகில் இருந்த காவலர்கள் அந்த நபரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து சிக்கந்தர் தாஜுதீன், காதர்ஷெரிப் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
newstm.in


