ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு!
ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி சடலமாக மீட்பு..! விருதுநகரில் அடுத்த கொடூரம்

விருதுநகர் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமி 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி - ராஜலட்சுமி தம்பதி. இவர்களது 9 வயது மகள் வசந்த குருலட்சுமி, அதேபகுதியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள பகுதிக்கு தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். பின்னர் தங்கை மட்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் குருலட்சுமி வீட்டிற்கு வரவில்லை. சந்தேகமடைந்த பெற்றோர் சிறுமியை ஆடு மேய்க்கச் சென்ற இடம், உறவினர்கள் வீடு என பல இடங்களில் தேடிப் பார்த்தனர். எனினும் சிறுமி கிடைக்காததால் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீயணைப்புத்துறை உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் வீட்டின் அருகிலிருந்த கிணற்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியை கொலை செய்தது யார்? தவறி கிணற்றில் விழுந்தாரா? பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே முழு காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.
newstm.in




