மாமியாரை பார்க்கச் சென்றப்போது சோகம்.. மருத்துவமனை காவலாளி தாக்கியதில் மருமகன் பலி..!
மாமியாரை பார்க்கச் சென்றப்போது சோகம்.. மருத்துவமனை காவலாளி தாக்கியதில் மருமகன் பலி..!

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நோயாளியை பார்க்க சென்ற தொழிலாளி, மருத்துவமனை காவாலாளியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் மரிய சுரேஷ்(40). இவர் கடந்த ஞாயிற்று கிழமை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மாமியாரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு காவல் பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ரெத்தினராஜ் என்பவருக்கும், மரிய சுரேஷ்-க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த காவலாளி ரெத்தினராஜ் தாக்கியதில் மரிய சுரேஷை நிலைகுலைந்து மயக்கமடைந்து கிழே விழுந்தார். மேலும் படுகாயம் காரணமாக சுய நினைவை இழந்ததாகத் தெரிகிறது. இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை மரிய சுரேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து, மரியசுரேஷின் மனைவி கஸ்தூரி, தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்த தக்கலை போலீசார், தலைமறைவான காவலாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.
newstm.in



