உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதிக்கும் இந்தியா !!
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்.. பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதிக்கும் இந்தியா !!

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட உலக நாடுகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இறுதி வெளியேற்றுதல் சுற்று முடிவில் இந்திய வீரர்கள் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 260.9 புள்ளிகளுடனும், அபினவ் ஷா 257.7 புள்ளிகளுடனும் இறுதிபோட்டிக்குள் நுழைந்தனர்.
விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் ருத்ராங்ஷ் பாலசாஹிப் பட்டீல் 17-13 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அபினவ் ஷா வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஜெர்மனி வீரர் நில்ஸ் பால்பெர்க் வெண்கலப்பதக்கம் பெற்றார். ஒரே பிரிவில் இந்திய வீரர்களே தங்கம், வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர்.

பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் போட்டியில் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை ரமிதா 8-16 என்ற புள்ளி கணக்கில் நடப்பு ஜூனியர் உலக சாம்பியனான பிரான்சின் ஓசியன் முல்லெரிடம் தோல்வியடைந்தார். இதனால் அவர் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பினார். இந்த போட்டியில் இந்தியா இதுவரை ஒரு தங்கம், 2 வெள்ளி என மொத்தம் 3 பதக்கம் அறுவடை செய்து பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
newstm.in

