பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த ரத்தனம்மா என்பவர் மகள் தீப்தி. திருமணமான தீப்தி, கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். 

இந்த நிலையில், வீட்டிலிருந்த ஒரு கிலோ அளவிலான பரம்பரை நகைகள் மாயமாகியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்த ரத்தனம்மா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தீப்தியிடம் போலிசார் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியது.

விசாரணையில், மதன் என்பவரிடம் கார் ஓட்ட தீப்தி பயிற்சி பெற்று வந்து நிலையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதை பயன்படுத்தி தீப்தியிடம் வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வந்தால் நாம் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து, தீப்தி அவரது தாய் ரத்தனம்மாவுக்கு தெரியாமல் வீட்டிலிருந்த நகைகளைக் கொஞ்சம், கொஞ்சமாக எடுத்து வந்து மதனிடம் கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் தீப்தியிடம் வாங்கிய நகைகளை வைத்துக் கொண்ட மதன் அண்மையில் மூன்று கார்களை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. மேலும் மதனுக்கு 3 கார்களையும் தீப்தி பரிசாக வழங்கியதாக போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து தீப்தி மற்றும் மதன் ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதனிடம் இருந்த 3 கார்களையும், தங்க நகைகளையும் போலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.