ஒரே சாவியில் 11 டூவீலர்.. கில்லாடிக்கு போலீஸ் காப்பு..!

ஒரே சாவியில் 11 டூவீலர்.. கில்லாடிக்கு போலீஸ் காப்பு..!

Update: 2022-02-03 13:01 GMT

சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூர், முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையம், டாஸ்மாக் கடை, வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக அதன் உரிமையாளர்கள் போலீசில் புகார் செய்தனர்.

இதையடுத்து, முத்தாபுதுப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜூ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இன்று காலை தனிப்படை போலீசார் வண்டலூர் - மீஞ்சூர் 400 அடி சாலை, பாலவேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் வேகமாக வந்த இளைஞரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்தனர்.


அப்போது அவர், காவலர்களிடம் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். மேலும், அவர் ஓட்டி வந்த பைக்கிற்கு எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார், அந்த இளைஞரை முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையம் கொண்டுசென்று விசாரணை நடத்தினர். இதில் அவர், திருநின்றவூர், பெரியார் நகர், திருவள்ளுவர் 3-வது தெருவைச் சார்ந்த கார்த்திக் (29) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருவள்ளூர், வெங்கல், வில்லிவாக்கம் ஆகிய இடங்களில் ரயில்வே ஸ்டேஷன், வீடு, கடைகள் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை ஒரே சாவியை பயன்படுத்தி திருடி வந்துள்ளார்.

அப்படி திருடிய வாகனங்களை, திருநின்றவூரை அடுத்த பாக்கம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்த மெக்கானிக் மணிகண்டன் (29) என்பவர் மூலம் விற்பனை செய்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து, மெக்கானிக் மணிகண்டனை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Similar News