11ஆம் வகுப்பு மாணவனை இழுத்துச்சென்று ரகசிய திருமணம்.. ஆசிரியை கைது !!

11ஆம் வகுப்பு மாணவனை இழுத்துச்சென்று ரகசிய திருமணம்.. ஆசிரியை கைது !!

Update: 2022-03-25 11:35 GMT

துறையூரில் 17 வயது பள்ளி மாணவனை திருமணம் செய்த ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி  மாவட்டம் துறையூர் அருகே தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 5ஆம் தேதி பள்ளி முடிந்தது மாலை வீட்டுக்கு சென்றார். அதன்பின்னர் விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர், கிராமத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் மாணவனின் தாயார் கடந்த 11ஆம் தேதி துறையூர் போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். முதல்கட்ட விசாரணையில் போலீசாருக்கு கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது மாணவன் படிக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் சிக்கத்தம்பூரைச் சேர்ந்த சர்மிளா (26) எம்ஏ, பிஎட், எம்ஃபில் அதே தேதியில் மாயமானது தெரிந்தது.

 
சர்மிளா 6 ஆண்டுகளாக இந்த பள்ளியில் வேலை செய்கிறார். மாணவன் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவருக்கு சர்மிளா பாடம் நடத்தியதாக தெரிகிறது.  இதனையடுத்து ஆசிரியையின் செல்போன் ஐஎம்ஈஐ எண்ணைக் கொண்டு போலீசார் டிரேஸ் செய்ததில் வேளாங்கண்ணி, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி ஆகிய இடங்களை காட்டியது.

கடைசியாக திருச்சி எடமலைப்பட்டி புதூரில் ஆசிரியை தோழி வீட்டில் தங்கி இருந்தது தெரிந்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் இருந்த ஆசிரியை மற்றும் மாணவனை பிடித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில், தஞ்சாவூர் கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்தது தெரிந்தது.  

இதையடுத்து துறையூர் காவல்துறையினர் மாணவனையும் ஆசிரியையும் துறையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் காவேரி ஆசிரியையிடம் விசாரணை மேற்கொண்டார். துறையூர் காவல் நிலையத்தில் வைத்து இருவரிடமும் விசாரணை முடிந்ததும் 17 வயது மாணவனை ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று திருமணம் செய்ததாக ஆசிரியை சர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

தன்னுடன் பயின்ற மாணவனை ஆசிரியை ஒருவர் இழுத்துச்சென்று திருமணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


newstm.in

 

 

Similar News