நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்ற 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி!!
நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்ற 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் பலி!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் பாலசுப்ரமணியன். கூலி வேலை செய்து வரும் இவரது மகன் சங்கர் (17). சாத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் இவர், சாத்தூர் ஏழாயிரம்பண்ணை சாலையில் உள்ள கண்மாயில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது சங்கர் கண்மாயில் ஒரமாக குளித்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அவர் நீரில் மூழ்கி உள்ளார். உடன் குளிக்க சென்ற நண்பர்கள் உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து ஊர் கிராம மக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சங்கரை பெற்றோர் தேடியுள்ளனர். அங்கு தேடியும் கிடைக்காததால் சாத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் இறங்கி தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். எனினும் ஆழம் அதிகம் இருந்த காரணத்தாலும் இருள் சூழ்ந்த பகுதி என்பதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது.
சுமார் 6 மணி நேர போராடி நீரில் மூழ்கிய சங்கரின் உடலை மீட்ட தீயணைப்பு படையினர், பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.