தலையில் கல்லைப் போட்டு 11-ம் வகுப்பு மாணவர் படுகொலை.. காதல் விவகாரமா..?
தலையில் கல்லைப் போட்டு 11-ம் வகுப்பு மாணவர் படுகொலை.. காதல் விவகாரமா..?
அரியலூர் மாவட்டம், தா பழூர் அருகே உள்ள பொற்பதிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் மணிகண்டன் (16).
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் தாய் லலிதா உடல்நலக் குறைவால் இறந்தார். அதன் பிறகு தந்தை மதியழகன் மறுமணம் செய்து கொண்டு அருகிலுள்ள வானதிராயன்பட்னம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
மணிகண்டன், தனது தாய்வழி தாத்தா - பாட்டி ராமசாமி, பாப்பாத்தி ஆகியோர் பராமரிப்பில் பொற்பதிந்தநல்லூர் கிராமத்தில் வளர்ந்து வருகிறார்.
மணிகண்டன் அரியலூரில் தாழ்த்தப்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அவ்வப்போது தாத்தா - பாட்டியை பார்க்க பொற்பதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து செல்வது வழக்கம். தற்போது 11-ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு எழுதிவிட்டு தாத்தா - பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
நேற்று இரவு வீட்டின் முன் பகுதியில் படுத்து தூங்கியுள்ளார். அவரது தாத்தா - பாட்டி இருவரும் அருகில் உள்ள இன்னொரு சிறிய வீட்டில் படுத்து தூங்கி உள்ளனர்.
காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் பகுதியில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டன் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தாத்தா - பாட்டியை அதிர்ச்சி அடைய வைத்தது.
படுத்து தூங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் மணிகண்டன் இறந்து கிடந்தது குறித்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அரியலூரில் இருந்து நேற்று மர்ம நபர்கள் சிலர் பொற்பதிந்தநல்லூர் கிராமத்திற்கு வந்து மணிகண்டனுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. காதல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.