ஓய்வூதியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

ஓய்வூதியர்களுக்கு 14% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்..!

Update: 2022-05-23 16:58 GMT

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1,2022 முதல் வழங்க வேண்டிய 14 சதவீதம் அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “திமுக. அரசு ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு முன்பு ‘பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றுவோருக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

80 வயதுக்கு மேல் 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்பட்ட ஓய்வூதியம் 70 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும், 80 வயதுக்கு மேல் 10 விழுக்காடாகவும் உயர்த்தி வழங்கப்படும்’ என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது.

ஆனால் இன்று, ஆட்சியில் அமர்ந்தவுடன் அவற்றையெல்லாம் காற்றில் பறக்கவிட்டதோடு மட்டுமல்லாமல், தற்போது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் விழுக்காடு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதுபோன்று சலுகைகளை பறித்து சாதனைப் படைப்பது தான் ‘திராவிட மாடல்’ போலும். எந்த மாடலாக இருந்தாலும் சரி, பெற்று வந்த சலுகைகள் பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் துவக்கப்பட்டு 51 ஆண்டுகள் கடந்த நிலையில், முதன்முறையாக பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் அகவிலைப்படி உயர்வை வழங்கிவிட்டு, அதன் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை நிறுத்தி வைத்துள்ளது திமுக அரசு.

ஆனால், ஓய்வு பெற்ற பெரும்பாலான ஊழியர்கள் வறுமை நிலையில் இருப்பதாகவும், மருத்துவம் மற்றும் வீட்டு வாடகைக்கு மட்டுமே பெரும் தொகை செலவிடப்படுவதாகவும், விலைவாசி உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வை பணியில் இருப்போருக்கு வழங்கப்பட்டது போல 01-01-2022 முதல் உயர்த்தி வழங்கவும்.

பிற வாரியங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இதுபோன்று வழங்கப்படாமல் இருந்தால், அவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கவும்.

இதுபோன்ற தவறான முன்னுதாரணத்தை இனி வருங்காலங்களில் ஏற்படுத்த வேண்டாம் என்றும் முதல்வரை அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Similar News