தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்..!
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்..!
இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களை அனுப்பி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் 21-ம் தேதி 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து வி.டி.சி.சன் என்ற சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் என மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 3-வது கட்டமாக இலங்கைக்கு 16,650 டன் அரிசி, 250 டன் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என சுமார் 17 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் வருகிற 23-ம் தேதி (சனிக்கிழமை) அனுப்பப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதை நாளை மறுநாள் அமைச்சர்கள், கனிமொழி எம்.பி. பார்வையிட உள்ளனர்.