18 அடியில் நித்தியானந்தா சிலை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

18 அடியில் நித்தியானந்தா சிலை.. அதிர்ச்சியில் பக்தர்கள்..!

Update: 2022-07-11 17:13 GMT

புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில், நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் ஒரு கோவிலைக் கட்டி வந்தார்.

இந்த கோவிலில், 27 அடியில் பிரமாண்ட முருகன் சிலை கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதேபோன்று, கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள நித்தியானந்தா உருவம் கொண்ட சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இந்த சிலையை பார்த்த போலீசார், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே, நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது.

இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் கேட்டபோது, ‘இது, சிவனின் மற்றொரு அவதாரமான கால பைரவர். மேலும், ஸ்தபதி சிலையை முறையாக வடிவமைக்காததால் இப்படி உள்ளது’ என்று கூறினர்.

பின்னர், கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்தபோது. அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக திட்டி வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தது. மேலும், ஏற்கனவே நித்தியானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது.

பாதுகாப்பு பணிக்கு வந்த ஆரோவில் போலீசார் நித்தியானந்தா சிலையை ஆச்சரியத்துடன் பார்த்தனர். பக்தர்களும் அந்த சிலையின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News