19 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொட்டிய மழை.. மிதக்கும் டெல்லி !!
19 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொட்டிய மழை.. மிதக்கும் டெல்லி !!
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. உத்தரகாண்டில் பெய்த மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு பலரும் உரிழந்தனர். இந்த நிலையில் டெல்லியில் 19 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை கொட்டியுள்ளது.
டெல்லியில் பெய்து வரும் கனமழையால் பல சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மின்டோ ரயில் நிலையம் உட்பட பல முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியதால் பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்தனர். இதனிடையே வரும் 4ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
டெல்லியில் ஒரே நாளில் 112.1 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இது கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவில், ஒரு நாளில் பெய்த அதிகபட்ச மழை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13ஆம் தேதி 126.8 மிமீ மழை பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.
newstm.in