சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீதான வழக்கில் 2 வாரத்தில் அறிக்கை !!
சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீதான வழக்கில் 2 வாரத்தில் அறிக்கை !!
பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா இருந்த போது, சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்ததாக சசிகலா மீதான வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். அவர் சிறை தண்டனை பெற்ற காலத்தில், அவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, சிறை அதிகாரிகள் சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது. இது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி ரூபாவும் வெளிப்படையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஓய்வுபெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு விசாரணை நடத்தியதில், ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரிய வந்தது.
இருப்பினும், இது தொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை ஏதும் சமர்பிக்காமல் இருந்து வந்தனர்.
இதனிடையே, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2 மாதத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.