ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 22 அரசுப்பள்ளிகள்!!
ஒரு மாணவர் கூட இல்லாமல் இயங்கும் 22 அரசுப்பள்ளிகள்!!
தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள 22 பள்ளிகளில் ஒரு மாணவரும் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 2022-23ஆம் கல்வியாண்டில் வரும் 13ஆம் தேதி முதல் பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளிகளை திறக்கும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகளவில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளி மேலாண்மைக் குழுவின் உதவியுடன் ஜூன் 14ஆம் தேதி மாணவர்கள் சேர்க்கை பேரணியை நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு மாணவரும் இல்லாத 22 பள்ளியில் 10 மாணவர்களை சேர்த்தால் 2 ஆசிரியர் பணியிடங்கள் வழங்கப்படும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள 669 பள்ளிகளிலும் இரட்டை இலக்கத்தில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் தொடக்கக் கல்வித்துறையில் உத்தரவிட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 22 தொடக்கப்பள்ளிகளில் ஒரு மாணவரும், ஆசிரியர்களும் இல்லாமல் உள்ளனர். 669 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் மட்டும் 11 பள்ளிகளிலும், 2 மாணவர்கள் 24 பள்ளிகளிலும், 3 மாணவர்கள் 41 பள்ளிகளிலும் படிக்கின்றனர்.
அதேபோல் 3800 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். 3,131 பள்ளிகளில் 60 மாணவர்கள் இருந்தும் தலைமை ஆசிரியர் மட்டுமே 5 வகுப்புகளுக்கான பாடங்களை நடத்தும் சூழ்நிலை உள்ளது. அவரும் அலுவல் பணிக் காரணமாக வெளியில் சென்றால் கற்பிப்பதற்கும் ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
newstm.in