22 வயது பெண்ணால் பலாத்காரம்.. 14 வயது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு..!
22 வயது பெண்ணால் பலாத்காரம்.. 14 வயது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவு..!
22 வயது பெண்ணால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி, குழந்தைகள் நல கமிட்டிக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த 14 வயது சிறுவன், 22 வயதுடைய உறவுக்கார பெண்ணால் கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானான்.
இதையடுத்து, அந்த பெண்ணின் மீது 'போக்சோ' உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.
வழக்கு விசாரணையின் நலன் கருதி, குழந்தைகள் நல கமிட்டியின் கட்டுப்பாட்டில் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனை காப்பகத்தில் வைத்து கமிட்டியினர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிறுவனை தங்களிடம் ஒப்படைக்கும்படி அவனது பெற்றோர் கோரிக்கை விடுத்தனர். அதை, குழந்தைகள் நல கமிட்டி ஏற்க மறுத்தது.
இதையடுத்து, சிறுவனை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி பெற்றோர் தரப்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘இந்த மோசமான சம்பவத்தில் இருந்து உணர்வுப்பூர்வமாக வெளியே வர பெற்றோரின் அரவணைப்பு சிறுவனுக்கு அவசியம்’ எனக் கூறி, பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
மேலும், குற்றவாளிகள் தரப்பு சிறுவனை சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்யும்படி பெற்றோருக்கும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.