பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்.. அறந்தாங்கி ஆஸ்பத்திரியில் அனுமதி..!

பிரியாணி சாப்பிட்ட 24 பேருக்கு வாந்தி, மயக்கம்.. அறந்தாங்கி ஆஸ்பத்திரியில் அனுமதி..!

Update: 2022-05-05 20:00 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகரில் நேற்று, சித்திரவேல் என்பவரின் வீட்டிற்கு கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது.

மதியம், அறந்தாங்கி - புதுக்கோட்டை சாலையில் உள்ள ‘ஏ1 பிரியாணி சென்டர்’ எனும் கடையில் 40 பிரியாணி பொட்டலங்கள் பார்சலாக வாங்கி கான்கிரீட் போடும் பணியில் இருந்தவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு சித்திரவேல் வழங்கியுள்ளார்.

பிரியாணி சாப்பிட்ட பலருக்கும் இரவு முதல் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு, காலை முதல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


காலையில் 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக இதுவரை 24 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில், கனிமொழி என்ற பெண்ணுக்கு அதிக வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி அபி, ஹரிஹர சுதன், பார்த்திபன் ஆகிய மூன்று பேர் நேற்று பிரியாணி சாப்பிட்ட நிலையில் இன்று காலை பொதுத் தேர்வுக்காக கிளம்பும்போது லேசான வயிற்று வலி இருந்துள்ளது.

தொடர்ந்து தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போது மயக்கம், வாந்தி ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட பிரியாணி உணவகத்தை நேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன் குமார், உடனடியாக சம்பந்தப்பட்ட உணவகத்தில் சாம்பிள் எடுத்து கொண்டு உணவகத்திற்கு சீல் வைத்தார்.

Similar News