கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி.. குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு..!

கடலூர் பட்டாசு ஆலை விபத்தில் 3 பேர் பலி.. குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு..!

Update: 2022-06-24 05:30 GMT

கடலூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்  நிவாரண உதவியை முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார்.

கடலூர் அருகே கேப்பர் மலை பகுதியில் உள்ள எம்.புத்தூரில் பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை  ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், பட்டாசு வாங்க வந்த ஒருவரும் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வெடி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெரியகரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த சித்ரா (35), நெல்லிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (50) மற்றும் மூலக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் (34) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனை அடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு எனது வருத்தத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த நெல்லிக் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வசந்தா என்பவருக்கு கடலூர் அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் மூன்று லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று அதில் கூறியுள்ளார்.

Similar News