கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 மாத குழந்தை..! காப்பாற்றிய பின் உயிரிழந்த தாய்!

கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 3 மாத குழந்தை..! காப்பாற்றிய பின் உயிரிழந்த தாய்!

Update: 2021-07-25 07:25 GMT

உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இந்த காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நாடுகளில் பருவங்கள் மொத்தமாக மாறி புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன. அண்மையில் மேற்கு ஐரோப்பியாவில் வரலாறு காணாத மழையால் ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்தன.

இந்த நிலையில் சீனாவின் மத்திய பகுதியில் உள்ள ஹெனான் மாகாணத்தில் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த கனமழையால் இங்குள்ள பல்வேறு நகரங்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் இதுவரை 33 ஆக உள்ளாதக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.  மேலும் மாயமானவர்களைத் தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வெள்ளத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளை மீட்புப் பணி வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் தாய் மற்றும் அவரது 3 மாதக் குழந்தையை கண்டறிந்த மீட்புப் பணி வீரர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் களம் இறங்கினர்.

மீட்புப் படையினரைக் கண்ட குழந்தையின் தாய் இடிபாடுகளுக்கு மத்தியில் தனது குழந்தையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை காப்பாற்றுவதற்காக மீட்புப் பணியாளர்களிடம் குழந்தையை தூக்கிவீசிய பிறகு அந்த தாய் உயிரிழந்தார்.

தனது குழந்தையை காப்பாற்றுவதற்காக இடிபாடுகளுக்கு மத்தியில் போராடி வந்த தாய் குழந்தை காப்பாற்றப்பட்ட உடன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


 

Tags:    

Similar News