கிணற்று நீரை குடித்த 3 பேர் உயிரிழப்பு.. 47 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
கிணற்று நீரை குடித்த 3 பேர் உயிரிழப்பு.. 47 பேர் மருத்துவமனையில் அனுமதி..!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்களில், திறந்தவெளி கிணற்றில் உள்ள நீரை குடித்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிணற்று தண்ணீரை குடித்த மேலும் 47 பேர் உடல் நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பாதிக்கப்பட்ட நபர்கள் அமராவதியில் உள்ள மெலாகாட்டின் பாச் டோங்ரி மற்றும் கொய்லாரி கிராமங்களைச் சேர்ந்தவர்கள். 3 பேர் உயிரிழந்தது குறித்து தகவல் அறித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அமராவதி ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தேவைப்பட்டால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கவும் உத்தரவிட்டார்.
திறந்த வெளி கிணற்றில் இருந்த அசுத்தமான நீரை குடித்ததால் 50 பேர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர், அவர்களில் மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர், முதல்வரிடம் தெரிவித்தார்.
அதற்கு ஷிண்டே, உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்காதவாறு தேவையான அனைத்து முயற்சிகளையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.