இந்தியாவில் 3வது அலை உறுதி.. கொரோனா நிபுணர் குழு எச்சரிக்கை..!
இந்தியாவில் 3வது அலை உறுதி.. கொரோனா நிபுணர் குழு எச்சரிக்கை..!
ஒமைக்ரான் பாதிப்புகளால், இந்தியாவில் வருகிற பிப்ரவரியில் 3வது அலை ஏற்படும் என, கொரோனா நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டாலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டது. இதற்கு, டெல்டா வகை கொரோனா காரணம் என கூறப்பட்டது. இதனால், முதல் அலையை விட 2வது அலை நாட்டில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திச் சென்றது.
அதன்பின்னர் டெல்டா பிளஸ் உள்ளிட்ட கொரோனா வகைகள் கண்டறியப்பட்டாலும் பெரும் தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை. சமீப நாட்களாக நாடு முழுவதும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா 3வது அலை சாத்தியம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தேசிய கொரோனா சூப்பர் மாடல் குழுவின் தலைவர் வித்யாசாகர் கூறும்போது, “இந்தியாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 3வது அலை ஏற்படக்கூடும். தற்போது, மக்களிடம் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதனால், 2வது அலையை விட இந்த அலை லேசாகவே பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நாட்டில் 3வது அலை நிச்சயம் ஏற்படும். நாள் ஒன்றுக்கு 7,500 கொரோனா பாதிப்புகள் தற்போது உறுதி செய்யப்பட்டு வருகின்றன. டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் அந்த இடத்திற்கு வரும்போது, இந்த எண்ணிக்கை உயரப் போவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.