மாடுகளின் பாரத்தை குறைக்கும் வகையில் மாட்டு வண்டியில் மூன்றாவது சக்கரத்தை உருவாக்கிய மாணவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் ராஜாராம் நகரில் ராஜாராம்பாபு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கரும்பு செழிப்பாக வளர்வதால் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை ஏற்றி சர்க்கரை ஆலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

இதை கண்ட கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மாட்டு வண்டியில் கரும்பை கொண்டு வரும் போது மாடுகளுக்கு ஏற்படும் கஷ்டத்தை குறைக்க முடியுமா என யோசித்தனர். இதற்காக விவசாயிகளை சந்தித்து பேசினர்.

இதனையடுத்து பலமுறை யோசித்து வண்டியின் முன்புறம் புதிய சக்கரம் ஒன்றை பொருத்தலாம் என முடிவு செய்தனர். இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்களிடம் அவர்கள் பேசியபோது அவர்களும் ஒப்புக்கொண்டனர்.

மேலும் மாணவர்களின் முயற்சிக்கு கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகமம் நிதியுதவி செய்தது. இது குறித்த ஆய்வில் மாட்டு வண்டியின் முன் பகுதியில் சக்கரம் அமைத்தால் அது மாட்டுக்கு ஏற்படும் பாரத்தை குறைக்கும் என தெரிந்து கொண்டனர்.

பின்னர் விமானத்தில் இருக்கும் முன்பகுதி சக்கரம் போன்று மாட்டு வண்டியில் முன்பாக சக்கரத்தை பொருத்தியுள்ளனர். இது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது. மாணவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

newstm.in