சக பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 மாணவர்கள் - கடலூரில் நடந்த பயங்கரம்..!!

சக பள்ளி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 மாணவர்கள் - கடலூரில் நடந்த பயங்கரம்..!!

Update: 2022-07-10 04:30 GMT

கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, அதேபகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து முடித்த கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் கடந்த மே மாதம் 22-ந் தேதி சக மாணவர்களை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் விழாவில் திட்டக்குடி பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், கேக் வெட்டிய போது, பிறந்தநாள் கொண்டாடிய மாணவர், மாணவியுடன் சேர்ந்து செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார். இதையடுத்து பிறந்தநாள் கொண்டாடிய மாணவர் வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், மாணவியுடன் படித்து வரும் ஆவினங்குடியை சேர்ந்த மாணவர் ஒருவர், அந்த மாணவியிடம் பிறந்தநாள் விழாவில் நீ கொடிக்களத்தை சேர்ந்த மாணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்னிடம் உள்ளது, அதை உனது வீட்டில் கொடுத்துவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து கடந்த 1-ந் தேதி, பள்ளி உணவு இடைவேளையின் போது அந்த மாணவி, பள்ளியின் பின்பகுதியில் உள்ள அந்த மாணவரின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அந்த வீட்டுக்குள் மாணவி சென்றவுடன், மிரட்டல் விடுத்த அந்த மாணவர் கதவை உள்பக்கமாக தாழிட்டார். மேலும், உள்ளே மாணவியுடன் படித்து வரும் மேலும் 2 மாணவர்கள் இருந்தனர். தொடர்ந்து அந்த 3 மாணவர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். அதையும் வீடியோ எடுத்துக்கொண்டு, வெளியே சொன்னால் வெளியிட்டு விடுவோம் என, மிரட்டி அனுப்பினர்.

இந்த சூழ்நிலையில் அந்த 3 மாணவர்களும் தாங்கள் எடுத்த வீடியோவை கொடிக்களத்தை சேர்ந்த மாணவருக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவரிடம் சாதாரண வகை செல்போன் இருந்ததால், அவருடன் இருக்கும் ஆவினங்குடியை சேர்ந்த மற்றொருவரின் செல்போனுக்கு வீடியோவை அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து இந்த வீடியோ விவகாரம் மேலும் ஒரு மாணவருக்கு தெரியவந்ததையடுத்து, அந்த மாணவரும், மாணவியிடம் சென்று தன்னிடம் வீடியோ உள்ளது என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடூரத்தை தனது தாயிடம் கூறி கதறி அழுது, இனி பள்ளிக்கு படிக்க செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய், ஆவினங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட மாணவர்களை அழைத்து வந்து விசாரித்தனர். மேலும் அவர்களது செல்போனை சோதனையிட்ட போது அதில் மாணவியின் புகைப்படம் மற்றும் வீடியோ இருந்தது.

இதனையடுத்து ஆவினங்குடியை சேர்ந்த 3 மாணவர்கள் மற்றும் இதற்கு தூண்டுதலாக இருந்ததாக கொடிக்களத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் என 4 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கிடைய சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பிரச்சினைக்குரிய பள்ளி மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரும் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவரது தாயுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News