ஆம்னி என்ற நிறுவனம் தாவர வகையிலான (சைவ) நாய் உணவை தயாரித்து வருகிறது. இந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்கு, பூசணிக்காய் போன்ற காய்கறிகளும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களும், பட்டாணி, பழுப்பு அரிசி, பருப்புகள் போன்றவையும் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த நாய் உணவை தொடர்ந்து 5 நாள் சாப்பிட்டு அதன் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்சில் உணவின் இயக்கம், அவரது அனுபவம் குறித்த தகவல்களை ஆம்னி நிறுவனத்திடம் தகவலாக தர வேண்டும். 5 நாள் நாய் உணவு சாப்பிட அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் என்னவென்று தெரியுமா? ரூ.5 லட்சம்.

இந்த வேலைக்கு தேர்வு செய்யப்பட எந்த தனித்தகுதியையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் நாய் உணவை சாப்பிடும்பட்சத்தில் ஒவ்வாமை ஏதுவும் ஏற்படவில்லை என்ற உறுதியான பின்னரே அவர் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார். ஒருவேளை ஒவ்வாமை ஏதும் ஏற்பட்டால் முன்னதாகவே நிறுவனத்திடம் தெரிவித்துவிட வேண்டும் என்ற நிபந்தனையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆம்னி நிறுவனத்தின் துணை நிறுவனரான ஷிவ் சிவகுமார் கூறும்போது, “எங்களால் தயாரிக்கப்படும் நாய் உணவு மிகவும் தூய்மையானது. இதில் ரகசிய பொருட்கள் எதையும் நாங்கள் கலப்பது இல்லை. அனைத்து நாய் உணவும், மனிதர்கள் உபயோகிக்கும் உணவு பொருட்களையே கொண்டிருக்க வேண்டும் என்பதே சட்டம். ஆனால் சில நிறுவனங்கள் விலங்குகளின் மலிவான உப பொருட்களை சேர்த்து, மனிதர்கள் உண்டு வீணாகிப்போன உணவுப்பொருட்களையும் சேர்க்கிறார்கள்.

ஆனால் எங்கள் ஆம்னி நிறுவனம் அப்படி அல்ல. இதனானேலே எங்கள் தயாரிப்புகளை மனிதர்கள் சுவைத்து பார்ப்பதற்காகவும், அதன் சுவை எப்படிப்பட்டது? இதனால் ஆரோக்கியம் எந்த அளவில் மேம்படுகிறது என்பதை தெரிந்து கொண்டு நிரூபிக்கும் வகையில் நாங்கள் ஆட்களை பணிக்கு அமர்த்துகிறோம்.

மேலும் இதில் விசேஷம் என்னவென்றால், எங்கள் ஆம்னி நிறுவனத்தின் தயாரிப்புகளை நான் மற்றும் எங்களது நிறுவனத்தின் மற்றொரு நிறுவனர் கூட சாப்பிட்டு பார்த்தோம். பிற நாய் உணவு தயாரிப்பு நிர்வாகிகள் யாராலும் இதுபோன்று செய்துவிட முடியாது என்பதை நாங்கள் சவாலாக முன்வைக்கிறோம்” என்று கூறினார்.

Tags: