35 ரூபாய்க்காக 5 வருடம் போராட்டம்… ஒருவரால் 2.98 லட்சம் பேருக்கு பயன்!!

35 ரூபாய்க்காக 5 வருடம் போராட்டம்… ஒருவரால் 2.98 லட்சம் பேருக்கு பயன்!!

Update: 2022-06-01 09:12 GMT

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியை சேர்ந்த பொறியாளர் ஒருவர் 5 ஆண்டுகளாக போராடி இந்திய ரயில்வேயிடம் இருந்து 35 ரூபாய் ரீஃபண்ட் (refund) பெற்றுள்ளார்.

கோட்டாவை சேர்ந்த பொறியாளர் சுஜீத் சாமி 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது ஊரில் இருந்து டெல்லி செல்வதற்காக ரயில் டிக்கெட் பதிவு செய்தார். ரயில் பயணம் ஜூலை 2ஆம் தேதி. 2017 ஜூலை 1ஆம் தேதி நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது.

சுஜீத் சாமி தனது டிக்கெட்டை ரத்து செய்துவிட்டார். 765 ரூபாய் மதிப்புள்ள அந்த ரயில் டிக்கெட்டுக்கு 665 ரூபாய் மட்டுமே அவருக்கு திருப்பிச் செலுத்தப்பட்டது. டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணம் 65 ரூபாய் உடன் 35 ரூபாய் சேர்த்து 100 ரூபாய் பிடித்தம் செய்தது ரயில்வே.

இந்நிலையில் தனக்கு வர வேண்டிய 35 ரூபாய் ரீஃபண்ட் தொகைக்காக சுஜீத் சாமி கடந்த ஐந்து ஆண்டுகளாக போராடியுள்ளார். 35 ரூபாய் தொகைக்காக 50 தகவல் அறியும் உரிமை மனுக்களை சுஜீத் சாமி தாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்திய ரயில்வே, ஐஆர்சிடிசி, நிதியமைச்சகம், சேவைக் கட்டண துறை உள்ளிட்ட துறைகளுக்கு பல்வேறு கடிதங்களை சுஜீத் சாமி அனுப்பியுள்ளார். இதையடுத்து சுஜீத் சாமி உள்பட 2.98 லட்சம் பேருக்கு ரீஃபண்ட் கட்டணம் வழங்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.


இதற்காக 2.98 கோடி ரூபாய் தொகையை இந்திய ரயில்வே ஒதுக்கியுள்ளது. லட்சக்கணக்கான பேர் தன்னால் பயனடைவது திருப்தி அளிப்பதாக சுஜீத் சாமி தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News