பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய 5ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கௌதம் அதானியின் அதானி எண்டர்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

முதல் நாளில் ஏலம் இறுதியாகவில்லை. இந்த நிலையில், இரண்டாவது நாளான நேற்றும் ஏலம் தொடர்ந்தது. இதில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரூ.1.49 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றைகளை ஏலம் கோரியுள்ளன. தொடக்க நாளில் இந்நிறுவனங்கள் 1.45 லட்சம் கோடிக்கு அலைக்கற்றையை ஏலம் எடுக்க விண்ணப்பங்களை சமர்ப்பித்தன.

ஏலத்தில் அனைத்து அலைவரிசைகளுக்கும் நல்ல போட்டி ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. 9ஆவது சுற்று முடிவில் இதுவரை ரூ.1,49,454 கோடி மதிப்புள்ள ஏலம் கோரப்பட்டுள்ளது. எனினும் இன்றும் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் ஏலம் தொடரும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

5ஜி ஏலத்தில் பங்கேற்க செலுத்த வேண்டிய முன்பண வைப்பு (இஎம்டி) தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.14,000 கோடியை செலுத்தியுள்ளது. ஒரு நிறுவனம் ஏலம் எடுக்கக் கூடிய அலைக்கற்றையின் அளவை இஎம்டி தொகையே பிரதிபலிக்கும் என்பதால் இந்த ஏலப் போட்டியில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கே மிக தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது.
 
 
newstm.in

Tags: