7 வகை சாப்பாடு.. 5 வகை இனிப்பு.. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு..!
7 வகை சாப்பாடு.. 5 வகை இனிப்பு.. வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு..!
பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூரைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மனைவி மகாலட்சுமி. இந்தத் தம்பதிக்கு ஹரிகர சுதன், சுகன்யா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் தங்கள் வீட்டில் பொமேரியன் வகையைச் சேர்ந்த பெண் நாயை டாபு என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றனர். 7 வயதான அந்த நாய் தற்போது கர்ப்பமாக உள்ளது.
இதையடுத்து அதற்கு வளைகாப்பு நடத்த முடிவு செய்த சிவக்குமார் குடும்பத்தினர், அதற்கான ஏற்பாடுகளை செய்தனர். அத்துடன், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களை அழைத்தனர்.
அந்த நாயை குளிப்பாட்டி, புத்தாடை மற்றும் மாலை அணிவித்து அமர வைத்தனர். பின்னர் புளி சாதம், பருப்பு சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம் உள்ளிட்ட 7 வகையான சாப்பாடு, 5 வகையான இனிப்புகள், பிஸ்கட், பழங்கள் வாங்கி வைத்து வளைகாப்பு நடத்தப்பட்டது.
அத்துடன், அந்த நாய்க்கு சாப்பாடு ஊட்டப்பட்டது. வளைகாப்பு விழாவிற்கு வந்தவர்கள் நாய்க்கு பொட்டு வைத்து, முன்னங்காலில் வளையல் அணிவித்தனர்.
இது குறித்து மகாலட்சுமி கூறும்போது, “நாங்கள் டாபுவை குழந்தை போல வளர்த்து வருகிறோம். அது நீண்ட ஆயுளுடன் எப்போதும் எங்களுடன் இருக்க இறைவனை வேண்டி வருகிறோம்” என்றார்.