தமிழகம் முழுவதும் 8,117 பேர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

தமிழகம் முழுவதும் 8,117 பேர்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

Update: 2022-03-29 13:06 GMT

பெருநகர சென்னை மாநகராட்சி சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடக்கி வைத்து, அப்பள்ளியில் வோ்ல்டு விஷன் தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ரூ.12.36 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட 3 ஸ்மார்ட் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “ஏழை மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை, நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை அளிப்பதற்கான கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் ஆண்டுக்கு 1,000 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் செயல்படத் தொடங்கிய உடன் மக்களிடமிருந்து பெறப்பட்ட வரவேற்பை அடுத்து 1,250 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. ஒரு ஒன்றியத்திற்கு மூன்று வருமுன் காப்போம் திட்ட முகாம்களும், 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியில் 4 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் இதுவரை திட்டமிடப்பட்டதை விட 1,035 வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 031 போ் பயனடைந்துள்ளனா். சென்னையில் இதுவரை நடைபெற்ற 14 மருத்துவ முகாம்கள் மூலம் 26 ஆயிரத்து 330 போ் பயனடைந்துள்ளனர்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 8,117 பேர் பயன்பெற்றுள்ளனர்; இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு இதுவரை 33 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது” என்றார்.

Similar News