தமிழகத்தில் 85% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி.. அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!
தமிழகத்தில் 85% பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி.. அமைச்சர் அதிர்ச்சி தகவல்..!
முழு ஊரடங்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது: “இதுவரை நடைபெற்ற ஊரடங்கிலேயே 100 சதவீத வெற்றி என்ற வகையில் இந்த ஊரடங்கு அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் தினசரி 2 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் தொற்று உயர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயரும் சூழல் நிலவுகிறது. எனவே, பொதுமக்கள் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
தினசரி உறுதிப்படுத்தப்படும் தொற்றுகளின் எண்ணிக்கையில் 85 சதவீதம் ‘எஸ் ஜீன்’ குறைபாடாகவும் (ஒமைக்ரான் அறிகுறி), மீதமுள்ள 15 சதவீதம் டெல்டா வகை கொரோனாவாகவும் இருக்கிறது.
அந்தவகையில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டு எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்களை 7 நாட்கள் வீட்டுத் தனிமையில் வைத்து மாநகராட்சி கண்காணித்து வருகிறது.
60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், அதிக பாதிப்பு உடையவர்களை மட்டும் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுவரை ‘எஸ் ஜீன்’ குறைபாடு கண்டறியப்பட்டவர்களில் பலர் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள். தமிழகத்தில் ‘எஸ் ஜீன்’ குறைபாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.
சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி, கிண்டி கிங் ஆஸ்பத்திரியில் சுமார் 500 பேர் சிகிச்சையில் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் எந்த ஒரு அறிகுறியும் இல்லாதவர்கள். பொங்கலுக்கு முன்பு இன்னொரு ஆலோசனை கூட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்துவார்.
மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கேட்டறிந்து அவர் நடவடிக்கை எடுப்பார். ஊரடங்கை பொதுமக்கள் மத்தியில் திணித்து பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்” என அவர் கூறினார்.