850 ரூபாய் அபராதம்! ரயில் என்ஜின் மேல் அமர்ந்து வாலிபர் போராட்டம்! ஜோலார்பேட்டையில் பரபரப்பு!
850 ரூபாய் அபராதம்! ரயில் என்ஜின் மேல் அமர்ந்து வாலிபர் போராட்டம்! ஜோலார்பேட்டையில் பரபரப்பு!
பெங்களூருவில் இருந்து புறப்பட்ட ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்திற்கு வந்து நின்றது. அந்த ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பிளாட்பாரத்தில் ரயில் நின்று கொண்டிருந்த போது விறுவிறுவென ரயில் என்ஜின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்.
திடீரென வாலிபர் ஒருவர் ரயில் என்ஜின் மேல் ஏறி அமர்ந்திருப்பதைப் பார்த்த என்ஜின் டிரைவரும், ரயில் பயணம் செய்துக் கொண்டிருந்த பயணிகளும் அந்த வாலிபரை, கீழே இறங்கும்படி கூறினார்கள். ஆனாலும் யாருடைய கூச்சலுக்கும் செவி சாய்க்காமல், கீழே இறங்க மறுத்து, அந்த வாலிபர் என்ஜின் மீது அமர்ந்து கொண்டே இருந்தார்.
இது குறித்து உடனடியாக என்ஜின் டிரைவர், ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர் அந்த பாதையில் செல்லும் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது. பின்னர், ரயில்வே போலீசார் மேலே ஏறி, அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து கீழே இறக்கினார்கள். விசாரணையில், ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் விவேக் என்பதும், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட் எடுத்துக் கொண்டு, ஸ்லீப்பர் கோச் பெட்டியில் பயணம் செய்ததால், டிடிஆர் அவருக்கு ரூ.850 அபராதம் விதித்தாக கூறியுள்ளார்.
பின்னர், ஊருக்குச் செல்வதற்கு பணமில்லாததால் இவ்வாறு செய்ததால் கூறியுள்ளார். ரயில்வே போலீசார், அதன் பின்னர் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து, அடுத்த ரயிலில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.